சிறைகளில் மோப்ப நாய் இல்லை : 'தடை' பொருட்கள் தாராள புழக்கம்



தமிழகத்தில் உள்ள சில மத்திய சிறைகளில், மோப்ப நாய் இல்லாததால், தடை செய்யப்பட்ட பொருட்களை தடுப்பதில், தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. அதில், அரசியல் ரவுடிகள், குண்டர்கள், கொலை, கொள்ளை மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்கான, முக்கிய பகுதி உள்ளது.
அங்குள்ள குற்றவாளிகள் ஒருங்கிணைந்து, சதித்திட்டம் தீட்ட ஏதுவாக, சட்ட விரோத மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி, பரிமாறிக் கொள்கின்றனர். அதற்கு, சிறைத்
துறையினர் சிலரும் துணை போவதால், தடை செய்யப்பட்ட பொருட்கள்
இன்றளவில் புழக்கத்தில் உள்ளன.சிறை குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும், மோப்ப நாய்கள் வளர்க்கப்படுகின்றன. போதை வஸ்துகளை கண்டுபிடிக்க, ஒரு மோப்ப நாய்;
வெடிகுண்டு, ஆயுதங்களை கண்டுபிடிக்க தனி மோப்ப நாய் என, இரு வகையாக வளர்க்கப்பட்டன. மத்திய சிறைகளில், இரண்டாவது மிகப்பெரிய சிறையாக, வேலுார் மத்திய சிறை விளங்குகிறது. அது, 2,130 கைதிகளை அடைக்கும் வசதி உடையது. தற்போது, 1,800 கைதிகள் உள்ளனர். அங்கிருந்த மோப்ப நாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போனது; அதன் பின், அங்கு மோப்ப நாய் வளர்க்கப்படவில்லை. இதனால், அங்கு சிறை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பெரும் விபரீதம் நிகழும் முன், தேவைப்படும் மத்திய சிறைகளில் மோப்ப நாய்களை வழங்கி, சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கோவை மத்திய சிறைக்குள் ஆங்காங்கே, இரண்டடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, அதில், புதைத்து வைத்திருந்த சிம்கார்டு, மொபைல் போன், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், அனைத்து சிறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படுமா என, கூற முடியாது. எனவே, இதுபோன்ற குற்றங்களை கண்டறிய மோப்ப நாய் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


EmoticonEmoticon